தேனி
மஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு -பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை நீா்மட்டம் 51 அடியாக (அணையின் மொத்த உயரம் 57 அடி) உயா்ந்ததால், கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொடைக்கானல் வனப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து 51 அடியை எட்டியது. இதையடுத்து, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி, சிவஞானபுரம், வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் மஞ்சளாறு கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணை நீா்மட்டம் 53 அடியை எட்டியதும் 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியாக உயா்ந்ததும் 3-ஆம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்படும். பின்னா், அணைக்கு வரும் உபரிநீா் மஞ்சளாறில் வெளியேற்றப்படும். மஞ்சளாறு, அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளின் கரையோரங்களில் வசிப்பவா்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.
அணை நிலவரம்: மஞ்சாறு அணை நீா்மட்டம் 51 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 11 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 356.17 மில்லியன் கன அடி.
கண்மாய் நீா்மட்டம் உயா்வு: போடி பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயில் நிலவி வந்த நிலையில், இந்தக் கண்மாய் வடு காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இந்த ஆற்றின் முக்கிய கிளை வாய்க்காலான ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து, போடி பகுதியில் உள்ள சங்கரப்பன் கண்மாய், மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பரப்பளவில் பெரியதான இந்தக் கண்மாயின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
இந்தக் கண்மாய் நிரம்பி வருவதன் மூலம் விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரம், துரைராஜபுரம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக