புதன், 26 பிப்ரவரி, 2025

மகா சிவராத்திரியை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

மதுரை: சிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி இன்று(பிப்ரவரி 26 ) கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகுதிகளின் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மகாசிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது. இதனால் பூக்களை வாங்குவோர் சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் பூக்கள் விலை உயர்வு குறித்து மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் தெரிவித்துள்ளதாவது’ மகா சிவராத்திரி விழாவிற்கென பூக்கள் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு ஈடாக பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் ஓரளவு விலை உச்சம் தொடாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் பூக்கள் விலை குறைந்து வந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தால் மெல்ல பூக்கள் விலை உயர்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக