செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

செம்பனார்கோயில் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உளுந்து பயிறு


செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் அருகே அறுவடைக்கு உளுந்து பயிறு தயார் நிலையில் உள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலையூர், கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், நடராஜப்பிள்ளைச்சாவடி, தலைச்சங்காடு, கருவி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், உளுந்து பயறு சாகுபடி செய்துள்ளனர். தற்போது விவசாயிகள், உளுந்து பயறு சாகுபடி செய்துள்ள வயல்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் சில வாரங்களில் உளுந்து பயறு அறுவடை செய்ய உள்ளது. இது குறித்து உளுந்து பயறு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி கூறியதாவது: மிகக்குறைவான வயதுடைய பயறு வகை பயிரான உளுந்து 65 முதல் 70 நாட்களில் பலன் தரக்கூடியது.

உளுந்து சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவும் மிகக் குறைவு. நுண்ணீர்ப் பாசன முறையில் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தைக் கடைபிடித்து உற்பத்தியை அதிகரிக்கலாம்.

உளுந்து சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடியில் அறுவடைக்குப் பிறகு பெறப்படும் உளுந்து செடி கால்நடைகளுக்கு மிகச் சிறந்த புரத உணவாகும். இதைச் சேமித்து வைத்து கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இந்த பகுதியில் கடந்த மாதம் உளுந்து பயறு சாகுபடி செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் உளுந்து அறுவடை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக